உலகம்

சேவையை நிறுத்திக்கொண்ட 320 ஆண்டுகள் பழமையான நாளிதழ்.. அரசில் கொள்கை முடிவால் நேர்ந்த சோகம் !

உலகின் பழமையான செய்தித்தாள்களில் ஆஸ்திரியாவை சேர்ந்த Wiener Zeitung என்ற பத்திரிகைக்கும் இடமுண்டு. வியன்னாவை தளமாகக் கொண்டு செயல்படும் இந்த தினசரி நாளிதழ் தொடர்ந்து 320 ஆண்டுகளாக தனது சேவையை தொடர்ந்து வருகிறது.

அதன் போட்டி பத்திரிகைகள் பலவும் அடுத்தடுத்து மூடப்பட்ட நிலையில், Wiener Zeitung பத்திரிகை மட்டும் பொதுமக்களின் ஆதரவோடு தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால், தற்போது இந்தப் பழமையான பத்திரிகை தனது செய்தித்தாள் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரிய அரசு தினசரி நாளிதழ் குறித்து சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி அச்சு பதிப்பில் பொது அறிவிப்புகளை வெளியிடுவதற்கு நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையை நீக்கப்போவதாக அறிவித்தது. இதனால் அதனை முதன்மை வருமானமாக கொண்ட நாளிதழ்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

அந்த வகையில் நூற்றாண்டு பழமையான Wiener Zeitung நாளிதழும் தொடர் நஷ்டத்தை சந்தித்துவந்தது. இதனால் சுமார் 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை அந்த நிறுவனம் இழந்ததாக கூறப்பட்டது. மேலும், அதன் பணியாளர்கள் 63 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து Wiener Zeitung தினசரி நாளிதழ் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் டிஜிட்டல் தளத்தில் Wiener Zeitung தொடர்ந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாதாந்திர அச்சுப்பதிப்பை விநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. பழமையான இந்த பத்திரிகை பல பேரரசர்களையும், நாடு ஜனநாயகமான பின்னர் 12 ஜனாதிபதிகளைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: லாட்டரியில் 24 கோடி.. போதையில் சீட்டை தொலைத்த உரிமையாளர்.. ஏமாற்ற பார்த்த பார் ஊழியருக்கு நேர்ந்த சோகம்!