உலகம்

20 வார விடுமுறை 2 வாரமாக குறைப்பு.. எலான் மஸ்க் செயலால் அதிர்ச்சியில் பெற்றோர்கள் !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்ட நிலையில், எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், நன்றாக சென்றுகொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி நாசம் செய்து வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதவிர , ட்விட்டர் நிறுவனத்தில் 12 மணி நேரம் வரை வேலை செய்யவேண்டும், அலுவலத்தில் வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தம் என பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், ட்விட்டர் பணியாளர்களின் பெற்றோர் விடுப்பை (Parental Leave) 14 நாள்களாகக் குறைத்து எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்விட்டர் பணியாளர்களுக்கு 20 வாரமாக இருந்த ( 140 நாள்கள் ) பெற்றோர் விடுப்பு (Parental Leave) தற்போது 2 வாரமாக (14 நாள்கள் )குறைக்கப்பட்டிருக்கிறது என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளர்களின் சலுகைகளை பறித்து வரும் எலான் மஸ்க் தற்போது பெற்றோர் விடுப்பையும் குறைத்துள்ளதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: "விக்கெட் எடுக்காதடா, அவர் வந்தால் சிக்ஸராக அடிப்பார்" -CSK பேட்டிங் குறித்து அஸ்வின் கலகல பேச்சு !