உலகம்

உணவு டெலிவரி பையில் இருந்த 800 வருட பழமையான Mummy உடல்.. வாலிபர் சொன்னதை கேட்டு அதிர்ந்துபோன போலிஸ்!

நம்மில் பலருக்கும் இறந்தவர் உடலை பார்த்தாலோ அல்லது இரவு நேரத்தில் சுடுகாட்டிற்கு அருகே சென்றாலோ பயமாக இருக்கும். ஆனால் 800 ஆண்டு பழமையான மம்மியோடு வாலிபர் ஒருவர் 30 வருடமாக இருந்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டை சேர்ந்தவர் ஜூலியோ சீர் பெர்மேஜோ. வாலிபரான இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பூங்கா ஒன்றில் மது குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த போலிஸார் அவர் வைத்திருந்த பெரிய உணவு டெலிவரி பையைச் சோதனை செய்தனர். அப்போது அதில் மம்மி உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த மம்மி உடலை ஜூலியோ சீசர் பெர்மேஜோவின் அப்பா 30 வருடங்களுக்கு முன்பு வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளார்.

இதன் பிறகு இந்த மம்மி எனது அறையில்தான் இருக்கும். அதனுடன்தான் நான் தூங்குவேன்.அதனோடு பேசுவேன். தனது ஆன்மீக காதலி அந்த மம்மி. நண்பர்களிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தேன்" என கூறியுள்ளார்.

பின்னர் அந்த மம்மியை போலிஸார் தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தனர். இதை ஆய்வு செய்தபோது அந்த மம்மி உடல் 600 முதல் 800 ஆண்டுகள் பழமையானது என்றும் 45 வயதுடைய ஆணின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மம்மி உடல் ஜூலியோ சீசர் பெர்மேஜோவின் தந்தைக்கு எப்படிக் கிடைத்தது? அவர் எங்கிருந்து எடுத்து வந்தார்? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மம்மி உடலை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்க உள்ளதாகப் பெரு அரசு தெரிவித்துள்ளது.

Also Read: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரசிகர்கள் வழங்கிய பொம்மைகள்..கால்பந்து போட்டியில் நெகிழ்ச்சி