உலகம்

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட மகன்.. வீட்டிலேயே மருந்து தயாரிக்கும் தந்தை : சீனாவில் ஒரு பாசப் போராட்டம்!

சீனாவைச் சேர்ந்தவர் சூ வெய். இவரது இரண்டு வயதுக் குழந்தை ஹாயாங். இந்தக் குழந்தை அரியவகை மரபணு நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் குழந்தை மூன்று வயதுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த அரிய வகை நோய்க்குச் சீனாவில் மருந்து இல்லை என கூறப்படுகிறது. இதனால் சூ வெய் தன் குழந்தையை வேறு நாட்டிற்குக் கூட்டிச் சென்று சிகிச்சைப் பார்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கொரோனா தொற்று பரவலால் அவரால் சீனாவை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சூவெய் தவித்து வந்துள்ளார்.

பின்னர் ஒரு கட்டத்தில் தனது மகனுக்கான மருந்தைத் தாமே கண்டுபிடித்துவிடலாம் என நினைத்து வீட்டிலேயே ஒரு மருந்து ஆய்வகத்தை உருவாக்கியுள்ளார் சூ வெய். இந்த ஆய்வகத்தில் இரவு, பகல் பாராமல் தனது குழந்தைக்கான மருந்தைக் கண்டுபிடித்து வருகிறார். இவரின் இந்த செயலுக்கு குடும்ப உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியைக் கைவிடவில்லை.

இது குறித்து சூ வெய், "நான் செய்வது சரியா, தவறா என்று யோசிக்க எனக்கு நேரம் இல்லை. எனது குழந்தைக்கான மருந்தைக் கண்டுபிடிப்பது ஒன்றே எனது நோக்கம். எனது குழந்தையால் பேச, நடக்கக் கூட முடியவில்லை. இருந்தாலும் அவனுடைய உணர்வுகளை உணர முடியும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் சூ வெய் பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூ வெய்யின் இந்த நடவடிக்கையில் ஏதாவது விபரீத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் ஒரு தந்தையின் பாசப் போராட்டம் அனைவரது மனதையும் தொடவே செய்துள்ளது என்பதுதான் உண்மை.

Also Read: “உயரும் கடல்மட்டம்..கடும் வறட்சி நிலவும்- புவியியல் அமைப்பே மாறும் அபாயம்”: பருவநிலை ஆய்வாளர் எச்சரிக்கை!