உலகம்

7 வருட போராட்டம்.. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, Hope விண்கலத்தை உருவாக்கும் பணி துபாய் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெண்வெளி மையத்தில் நடைபெற்றது.

பின்னர், அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் 2016ம் ஆண்டு இதற்கான பணிகளைத் தொடங்கிவைத்தார். இந்த விண்வெளி மையத்தில் 200 அமீரக பொறியாளர்கள் பணியாற்றினர்.

பிறகு, 2020ம் ஆண்டு ஜுலை மாதம் ஜப்பானின் தானேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து HOPE விண்கலம் பூமியிலிருந்து மணிக்கு 39 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் இதன் பயணம் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, செவ்வாய் கிரகத்திற்கு மிக அருகில் சென்றவுடன் அதன் வேகமானது மணிக்கு 18 ஆயிரம் கிலோமீட்டர் வேகமாகக் குறைக்கப்பட்டது. பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை அடைய இந்த விண்கலம் 204 நாட்கள் எடுத்துக்கொண்டது.

பின்னர், HOPE விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்ததும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆனந்தக் கண்ணீருடன் தங்கள் வெற்றியை பரிமாறிக்கொண்டனர். இந்த வெற்றி மூலம், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய 5வது நாடு எனும் பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை குறித்து ஐக்கிய அரபு அமீகரத்தின் தொழில்நுட்ப அமைச்சர் சாரா பேசுகையில், "நாங்கள் செவ்வாய் கிரகத்தை அடைந்துவிட்டோம். 7 வருடத்திற்குப் பிறகு எனது தோளில் வைக்கப்பட்ட சுமையை இறக்கி வைத்திருப்பதுபோல் உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த மகத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 50வது ஆண்டை கொண்டாட உள்ள அமீரகத்திற்கு HOPE விண்கலத்தின் வெற்றி ஒரு மகுடமாக அமைந்திருக்கிறது.

Also Read: நாள் ஒன்றுக்கு 19,000 முறை 'ஐ லவ் யூ Alexa' சொல்லும் இந்தியர்கள் : அமேசான் நிறுவனம் வெளியிட்ட தகவல்