உலகம்

“டிரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர்” - ஜோ பிடெனுக்கு ஆதரவாக ஒபாமா கருத்து !

டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு முற்றிலுமாக தகுதியற்ற ஒரு நபர் என முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் ஜனநாயகத்தை காக்க ஜோ பிடெனுக்கு வாக்களிக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பாக தற்போதைய அதிபர் டிரம்பை எதிர்த்து ஜோ பிடேன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஜோ பிடேனுக்கு ஆதரவாக டிரம்பை விமர்சித்துப் பேசியுள்ள முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா ”அவர் வேலையில் எந்த வித ஆர்வத்தையும் காட்டவில்லை. அனைவருக்கும் பொதுவான தளத்தைக் கண்டடைவதில் ஆர்வம் காட்டவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ”அவருடைய அலுவலகத்தின் அற்புதமான வல்லமையை யாருக்கும் உதவுவதற்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக அவருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் மட்டுமே பயன்படுத்திக்கொண்டார். அவர் ஏங்கும் கவனிப்பை பெறுவதற்கு தவிர வேறு எதற்காகவும் தன்னுடைய அதிபர் பதவியைப் பயன்படுத்த முடியும் என அவர் எண்ணவில்லை,” என ஒபாமா பேசியுள்ளார்.

டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் ஒபாமா நேரடியாக அவர் மீது எந்த விதமான விமர்சனத்தையும் வைத்ததில்லை. முதல் முறையாக தற்போதுதான் நேரடியாக விமர்சித்துப் பேசியுள்ளார். முன்னதாக ஒபாமாவின் மனைவியான மிஷெல் ஒபாமாவும் டிரம்பை மோசமான அதிபர் என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘ட்ரம்ப் அமெரிக்காவின் தவறான அதிபர்’ - மிஷெல் ஒபாமா காட்டம்!