உலகம்

‘விக்கிலீக்ஸ்’ இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நாடுகடத்தப் படுகிறாரா?

‘விக்கிலீக்ஸ்’ இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதனால் அமெரிக்க அரசால் மரணதண்டனை விதிக்கப்படும் என அஞ்சி அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்.

அமெரிக்காவில் இருந்து வெளியேறிய ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2012-ம் ஆண்டில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் அளித்ததையடுத்து அங்கு வசித்து வந்தார்.

பின்னர் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரை லண்டன் மெட்ரோபாலிடன் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, ஜூலியன் அசாஞ்சாவை, அமெரிக்காவுக்கு நாடு கடத்தவேண்டும் என்று அமெரிக்கா கோரியிருந்தது.

அமெரிக்க நீதித்துறை ஜூலியன் அசாஞ்சே மீது 18 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. அசாஞ்சே, தற்போது லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் உயர் பாதுகாப்பில் இருக்கிறார்.

இந்த நிலையில், ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவதற்கான உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் சாஜித் ஜாவித் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, “நான் கையெழுத்திட்டாலும் இந்த விவகாரம் நீதிமன்றங்களால் தீர்க்கப்படவேண்டியது” எனத் தெரிவித்துள்ளார் சாஜித் ஜாவித்.