Viral

வந்தே பாரத் இரயில் துவக்க விழா... சட்டென்று தண்டவாளத்தில் விழுந்த பாஜக MLA -ஷாக் வீடியோவின் பின்னணி என்ன?

உத்தர பிரதேசம் - டெல்லி பகுதியில் அமைந்துள்ள ஆக்ராவில் இருந்து வாரணாசிக்கு புதிதாக வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று (16.09.2024) காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிறகு இந்த இரயில் செல்லும் வழித்தடங்களில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களில் வந்தே பாரத் இரயிலுக்கு உள்ளூர் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் உள்ளிட்டோர் கொடியசைத்தும், பூக்கள் தூவியும் வரவேற்பு கொடுத்தனர்.

அந்த வகையில் எட்டவா (Etawah) பகுதிக்கு வந்துகொண்டிருந்த வந்தே பாரத் இரயிலை வரவேற்க ஏராளமானோர் பிளாட்பார்மில் திரண்டனர். பின்னர் இரயில் வந்த நிலையில், அது அங்கிருந்து புறப்படுவதற்காக சமாஜ்வாடி கட்சி எம்.பி ஜிதேந்திர துவாரே, பாஜக முன்னாள் எம்.பி ராம் சங்கர், பாஜக எம்.எல்.ஏ சரிதா பஹதுரியா (Sarita Bhadoria) உள்ளிட்ட பலரும் பச்சை கொடியசைக்க தயாராகி கொண்டிருந்தனர்.

அப்போது அருகில் இருந்தவர்கள் முண்டியடித்து தள்ளினர். இதில் நிலைத்தடுமாறிய பாஜக எம்.எல்.ஏ சரிதா பஹதுரியா, சட்டென்று இரயில் தண்டவாளத்தில் விழுந்தார். இரயில் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில், அவர் விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜக எம்.எல்.ஏ கீழே விழுந்ததை கண்ட அருகில் இருந்தவர்கள், உடனே அவரை தண்டவாளத்தில் இருந்து தூக்கிவிட்டு உதவி செய்தனர்.

இதையடுத்து அவர்கள் உதவியுடன் மேலே ஏறி மீண்டும் பிளாட்பாரத்திற்கு வந்தார். பிறகு இரயில் புறப்பட்டு சென்றதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது நலமுடன் இருக்கிறார்.

நல்வாய்ப்பாக இரயில் நகர்வதற்கு முன்பே அவர் விழுந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு எந்தவித காயமும், சேதமும் இல்லாமல் உயிர் தப்பினார். பாஜக எம்.எல்.ஏ. சரிதா பஹதுரியா இரயில் தண்டவாளத்தில் விழுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு : டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்கு - நடந்தது என்ன?