Viral

Fact Check: தொடர்ந்து வதந்தி பரப்பும் பாஜக... இணையத்தில் வைரலாகும் பாஜக மாநில பஸ் நிலையம்... உண்மை என்ன?

நாட்டில் போலியான செய்திகளை பரப்புவதில் முன்னிலையில் இருப்பது பாஜக என்று சொன்னால் அது தவறில்லை. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும், வந்த பின்னரும் குற்றச்சம்பவங்கள் உட்பட போலி செய்திகளும் அதிகரித்தே வருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் வசதிகள் அதிகமாக இருப்பதாக பாஜகவினர் வேண்டுமென்றே போலி செய்தியை பரப்பி வருகிறது.

இந்த சூழலில் அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போதும் அரங்கேறியுள்ளது. பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதி இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பெருமைக்குரிய ஒன்றாகும். இந்த நகரத்தின் பேருந்து நிலையம் பல்வேறு வசதிகளை கொண்டதாக உள்ளது என்று இணையத்தில் பாஜக ஆதரவாளர்கள் போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பேருந்து நிலையம் மத்திய பிரதேசத்தின் உடையது அல்ல, கனடா நாட்டினுடையது என்று தெரியவந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடா நாட்டின் டொரோண்டோ நகரின் இந்த பேருந்து முனையம் திறக்கப்பட்டது. நவீன வசதிகள் கொண்ட இந்த பேருந்து முனையத்தில் நாள்தோறும் பல்வர் இடங்களில் இருந்து பயணிகள் பயணிக்கின்றனர்.

முன்னதாக இதே போல் வெளிநாடுகளை சேர்ந்த பாலம், இரயில் நிலையம் உள்ளிட்ட பல நவீன விஷயங்களை பாஜக ஆளும் மாநிலங்களின் சாதனைகள் என்று போலியான செய்திகளை பரப்பி வந்தனர். மேலும் கடந்த 2014, 2019 ஆகிய மக்களவை தேர்தலுக்கு முன்னர் கூட பாஜக அரசின் சாதனைகள் என்று இல்லாத ஒன்றை தயாரித்து வெளியிட்டது பாஜக.

குறிப்பாக குஜராத் மாடல் என்று கூறி சீனா, ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளின் நவீன கட்டமைப்புகளை தங்கள் சாதனைகள் என்று மக்கள் மத்தியில் போலியான செய்திகளை பரப்பியது. ஏன் அண்மையில் கூட துபாயின் புர்ஜ் கலிஃபா-வில் அயோத்தி இராமர் உருவப்படம் ஒளிரப்பட்டதாக வீடியோக்கள் வெளியானது. ஆனால் அது 2021-ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘குரூப்’ படத்தின் ப்ரோமோஷன் படத்தை எடிட் செய்துள்ளது வெளியிட்டது அம்பலமானது.

இப்படியாக பாஜகவினர் தொடர்ந்து வதந்தி பரப்பி வரும் நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்ட இதுபோன்ற செயலை செய்திருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: Fact Check: மத மோதலாக உருவாகும் பூனம் பாண்டே இறப்பு விவகாரம் ? - பின்னணி என்ன ?