Tamilnadu

‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் நாளை முடிவடைகிறது : நிறைவு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார்!

தமிழ்நாட்டின் உள்ளூர் வீரர்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஏற்கனவே மாவட்ட, மண்டல அளவில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 4 ஆம் நாள் முதல் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடைபெற்ற இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என ஐந்து வகையான பிரிவுகளில் போட்டிகள் களைகட்டியது.

தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், குத்துச்சண்டை, ஹாக்கி, கபடி உள்ளிட்ட 25 வகையான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், இதற்கான பிரம்மாண்ட நிறைவு விழா நாளை (அக்டோபர் 24) நடைபெற இருக்கின்றது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மாலை நடைபெறக்கூடிய வண்ணமயமான நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பல்வேறு வகையான பிரிவுகளை நடைபெற்ற இந்த போட்டிகளில் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு தலா ஒரு லட்சமும், வெளிப்பதக்கம் வென்றவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாயும், வெண்கல பதக்கம் வென்ற வீரர்களுக்கு 50,000 ரூபாயும் பதக்கங்களும் பரிசாக வழங்கப்பட்டது.

குழு பிரிவில் முதலிடத்திற்கு கோப்பை உடன் 75,000 ரூபாயும் இரண்டாவது இடத்திற்கு கோப்பையுடன் 50,000ரூபாயும், 3வது இடத்திற்கு கோப்பையுடன் 25,000ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

தேசிய, உலக அளவில் தமிழ்நாடு வீரர்கள் பதக்கங்களை அள்ள, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: மணிக்கு 160 கி.மீ வேகம்... சோதனை ஓட்டத்துக்கு தயாராக இருக்கும் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் இரயில் !