Tamilnadu

மணிக்கு 160 கி.மீ வேகம்... சோதனை ஓட்டத்துக்கு தயாராக இருக்கும் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் இரயில் !

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இரயில் இணைப்பு பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் (ICF), வந்தே பாரத் இரயில் சேவையின் ஸ்லீப்பர் கோச் (Sleeper Coach) பெட்டிகளின் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பேசிய ICF பொது மேலாளர் சுப்பா ராவ் பேசியதாவது, ”நாடு முழுவதும் பல்வேறு நகரங்ளுக்கு இடையே 77-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

வந்தே பாரத் இரயில்களை பொறுத்தவரை, முழுவதும் ஏசி வசதி, பயோ கழிவறை, தானியங்கி கதவு, நவீன பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதிகளுடன் இயக்கப்படுகின்றன. 

இந்நிலையில் முதன் முறையாக வந்தே பாரத் இரயில்களின் ஸ்லீப்பர் கோச் (Sleeper Coach) பெட்டிகள், இந்த ICF இரயில்வே இணைப்பு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரயில் 16 பெட்டிகளைக் கொண்டது. இந்த இரயிலில் 11 மூன்றடுக்கு ஏசி தூங்கும் வசதி பெட்டிகளும், 4 இரண்டு அடுக்கு தூங்கும் வசதி பெட்டிகளும், 1 முதல் வகுப்பு தூங்கும் வசதி ஏசி பெட்டி என மொத்தம் 16 பெட்டிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் 611 படுக்கைகளும், இரண்டடுக்கு தூங்கும் வசதி பெட்டிகளில் 188 படுக்கைகளும், முதல் வகுப்பு பெட்டியில் 24 படுக்கைகளும் உள்ளன. இந்த ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் இரயில்களில் மொத்தமாக 823 பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த இரயில் மணிக்கு 160 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் இந்த இரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தூங்கும் வசதி கொண்ட வந்தே இரயில் அடுத்த 3 மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

Also Read: மோசடி சாமியார்கள் : “அரசும், நீதிமன்றங்களும் பல்லற்ற வாயாக இருக்கலாமா?” - கி.வீரமணி விமர்சனம் !