Tamilnadu

அமுதம் மக்கள் அங்காடியில் 15 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு விற்பனை: விலை விவரம் என்ன?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.499/- விலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 15 மளிகைப்பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் விவசாயப் பெருமக்களின் நலனைப் பாதுகாத்திடவும், பொதுவிநியோகத் திட்டப் பொருட்களைக் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்து பொதுவிநியோகத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திட முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972-இல் தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டினைக் கடந்து இந்தியாவிற்கே முன்மாதிரியாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

தரமான பொருள் நியாயமான விலை என்ற கோட்பாட்டுடன் இயக்கப்பட்டுவரும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சென்னை கோபாலபுரம் மற்றும் அண்ணாநகரில் இயங்கி வரும் அங்காடிகள் முதற்கட்டமாக நவீனமயமாக்கப்பட்டு துணை முதலமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இலாப நோக்கமின்றி தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களின் பேராதரவுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக வரும் பண்டிகைக் காலங்களைக் கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பின் விற்பனையினை இலாபநோக்கமின்றி ரூ.499/- விலையில் அமுதம் பிளஸ் மளிகைத்தொகுப்பு என்ற பெயரில் இன்று (22.10.2024) சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் துவக்கி வைத்தார்கள். மஞ்சள் தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகிய பொருட்கள் இம்மளிகைத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

இந்த மளிகைத்தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னை கோபாலபுரம், அண்ணாநகர், பெரியார் நகர் அமுதம் மக்கள் அங்காடிகளிலும், அடையார், சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, கலைஞர் கருணாநிதி நகர், நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அமுதம் நியாய விலைக் கடைகளிலும் செயல்படுத்தப்படுகிறது.

அமுதம் பிளஸ் மளிகைத்தொகுப்பு விற்பனைத் துவக்க விழா கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களின் தலைமையிலும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர். எழிலன் நாகநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, 9வது மண்டலக் குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், 111வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.ஆ.நந்தினி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் சு.பழனிசாமி, இ.ஆ.ப., உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் த.மோகன், இ.ஆ.ப., மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Also Read: ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி... முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு !