Tamilnadu

”தமிழ், திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆண்டி அம்பலம் அவர்களின் மகன் ஆண்டிச்சாமிக்கும் - ராதாதேவி இணையரின் சுயமரியாதை திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

இந்த திருமண நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, ”இந்தத் திருமணம் கழக குடும்பங்களுக்கே உரிய வகையில் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இங்கே நிறைய மகளிர் வருகை தந்திருக்கிறீர்கள் உங்களின் உற்சாகத்தை பார்க்கும்போது அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் எங்களையும் தொற்றிக் கொள்கிறது.

ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றார்கள், படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுத்தது திராவிட இயக்கமும், தந்தை பெரியார் அவர்களும் தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில் இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களும் மகளிர் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஆட்சிக்கு வந்து, உடன் நமது முதலமைச்சரின் முதல் கையெழுத்து, கட்டணம் இல்லா விடியல் பயணத்திற்குத் தான்.இ ந்தத் திட்டத்தின் கீழ் 530 கோடி பயணங்கள் மகளிர் மேற்கொண்டு உள்ளீர்கள். தேபோல முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் 20 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

புதுமைப்பெண் திட்ட மூலம் 3 லட்சம் மாணவிகள் மாதம் 1000 மற்றும் தமிழ் புதல்வன் திட்ட மூலம் கல்லூரி படிக்கும் 3 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான திட்டம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் மூலம் ஓராண்டுக்கு மேல் மாதம் 1000 பெறுகின்றனர். விடுபட்ட சிலருக்கு கலைஞர் உரிமை திட்டத்தின் கீழ் நிச்சயம் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுப்போம் என கூறினார். இப்படி மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தின் மீது முதலமைச்சர் அவர்களுக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு இந்த பகுதியில் கழக ஆட்சி அமைந்த பிறகு சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பழனியில் உள்ள அரசு மருத்துவமனை ரூபாய் 100 கோடி செலவில் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது, அதேபோல விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ஆத்தூர் - ஒட்டன்சத்திரம் தொகுதிகளுக்கு தலா ரூபாய் 3 கோடி மதிப்பில் இரண்டு மினி ஸ்டேடியங்கள் வர உள்ளன. இன்னும் பல திட்டங்கள் இந்த திண்டுக்கல் மாவட்டத்திற்கு வர இருக்கிறது.

இன்றைக்கு பல பேர் எப்படியாவது இந்தியை திணிக்கலாம் என்று முயற்சி செய்கிறார்கள். நேரடியாக முடியவில்லை ஆகவே தமிழ் தாய் வாழ்த்திலிருந்து வார்த்தைகளை நீக்குவது, புதிய கல்விக் கொள்கை என்று பின் வாசல் வழியாக வருவது என முயல்கின்றனர். சில ஆரியநர்களும் இதற்கு துணை போக முயன்றனர். ஆனால் நம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்த பதிலடியால் சூடுபட்டு போய் இருக்கின்றனர்.

ஏற்கனவே அண்ணா சூட்டிய தமிழ்நாடு எனும் பெயரை மாற்ற போகிறேன் என கிளம்பி குட்டு பட்டார்கள் இப்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்குகிறேன் என்று மண்ணை கவ்வி உள்ளார்கள் எனவே இங்கு தமிழையும் தமிழ்நாட்டையும் திராவிடத்தையும் யாராலும் எதுவும் செய்ய முடியாது என கூறினார். இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது அதை நம் தலைவர் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 379 இணைகளுக்கு திருமணம் : சீர்வரிசை வழங்கி முதலமைச்சர் வாழ்த்து !