Tamilnadu

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 379 இணைகளுக்கு திருமணம் : சீர்வரிசை வழங்கி முதலமைச்சர் வாழ்த்து !

சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

இது குறித்து வெளியான அறிக்கையில், "2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, திருக்கோயில்கள் சார்பில் இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்திடும் வகையில் கடந்த 4.12.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 500 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, 2023-2024 ஆம் அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, "பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000/- மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன் 600 இணைகளுக்கு திருமண விழா நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக முதலமைச்சர் 7.07.2023 அன்று 34 இணைகளுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

இந்த அரசு பொறுப்பேற்றபின், 2022-2023 ஆம் நிதியாண்டில் 500 இணைகளுக்கும், 2023 2024 ஆம் நிதியாண்டில் 600 இணைகளுக்கும், என மொத்தம் 1,100 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் "பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் (21.10.2024) திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார். சென்னை உட்பட மாநிலம் முழுவதும் இன்று மட்டும் மொத்தம் 379 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இணைகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: "இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டாம் என்று நினைக்கிறீர்களா?" - பாஜகவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி !