Tamilnadu

முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை! : படத்திறப்பு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையை எழுத்து ஊடகத்தில் முன்மொழிந்து வரும் முரசொலியை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகித்த, முரசொலி செல்வம் மறைவை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முரசொலி செல்வம் மறந்துவிட்டார் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏன், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இறப்பதற்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் பேசினார். ’நான் சென்னை வருகிறேன்’ என்றார். வந்தார். ஆனால் உடல் மட்டும்தான் வந்தது.

முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை அடுத்து, முரசொலி செல்வம் அவர்களின் மறைவுக்கு பிறகு, என் மனம் உடைந்து சுக்குநூறாகிவிட்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறேன். காரணம், பள்ளிக்காலம் முதல், எனக்கு இயக்கப்பணிகளை கற்றுக்கொடுத்தவர் முரசொலி செல்வம்.

மேடைகளில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், அதை ஏற்ற இறக்கத்தோடு எப்படி பேச வேண்டும் என எனக்கு பயிற்சி கொடுத்தவர் முரசொலி செல்வம். இவர் இன்று இல்லை என நினைக்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். தி.மு.க முப்பெரும் விழாவின் போது முரசொலி செல்வம் அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படும்.

திராவிட இயக்க கருத்தியலை எல்லோருக்கும் ஆழமாக கொண்டு சேர்க்கும் வகையில் முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் ‘திராவிட இதழியல் பயிற்சி அமைப்பு’ ஒன்றை தொடங்க வேண்டும் என்ற திராவிடக் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களில் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் படும் என உறுதியளிக்கிறேன்” என்றார்.

Also Read: அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் திருவுருவப் படம் திறப்பு!