Tamilnadu

”ஆளுநர் பேச்சு அன்றோடு போச்சு” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் புதிய வெள்ளி திருத்தேர் திருப்பணிகள் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் குடமுழுக்கிற்கான திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ”காளிகாம்பாள் திருக்கோயிலில் உள்ள தேரில் வெள்ளி தகடு பொருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி இந்த வெள்ளித்தேர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.

உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டும் அனைத்து பணிகளையும் விரைவுப்படுத்தி செயலாக்கத்துக்கு கொண்டு வந்து நீதிமன்ற பாராட்டுகளை பெரும் துறையாக இந்து சமய அறநிலையத் துறை உள்ளது.

கடந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திருவண்ணாமலை தீபத் திருவிழாக்கு வருகை தந்தார்கள், இந்த ஆண்டு 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சிதம்பரம் கோவில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகு பல தவறுகள் நடந்திருக்கின்றன, அனுமதி இல்லாமல் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது, இதையெல்லாம் நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தினமும் பரபரப்பை உண்டாக்க வேண்டும், தன்னை நோக்கியே ஊடகங்கள் இருக்க வேண்டும் என்ற நினைப்பில்பல செயல்களை செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர். அவருக்கு பதிலடி கொடுப்பதில் முதலமைச்சர் எப்போதும் பின்வாங்க மாட்டார். ஆளுநர் பேச்சு அன்றோடு போச்சு” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஆளுநர் நிகழ்ச்சியில் 'தமிழ்த்தாய் வாழ்த்து" அவமதிப்பு - ஆளுநரை காக்கும் விதமாக மன்னிப்பு கேட்ட DD தமிழ் !