Tamilnadu

”தமிழ்நாட்டின் வலி நிவாரணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : அமைச்சர் சேகர்பாபு புகழாரம்!

பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தன் இருப்பினை காட்டிக்கொள்ளவதற்காக அரசின் சிறப்பான நடவடிக்கைகளை குறை சொல்கிறார் என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மடல் அரசு இறையன்பர்கள் மகிழ்ச்சி பெரும் வகையில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை வரையறுத்து ஆன்மீகம் என்றாலே, அறம் சார்ந்த துறை என செயல்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலைத்துறை உருவாக்கப்பட்டதிலிருந்து தலை சிறந்த அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அன்னதான திட்டத்தில் 20 திருக்கோயில்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி அமைந்த போது இரண்டு கோயில்களிலும் முழு நேர அன்னதான திட்டம் இருந்தது. தற்போது இது 11 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அன்னப்பிரசாதம் இதுவரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்களில் மட்டும் பக்தர்களுக்கு லட்டு வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 20 திருக்கோவில்களில் கட்டணம் இல்லாமல் வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசு அறிவிக்கும் முன்னரே காசி, இராமேஸ்வரம் ஆன்மீக பயணம் அறிவித்து 2 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது இந்த அரசு. இவ்வாண்டு 2500 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கனமழையின் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, காலை முதல் இரவு வரை களத்தில் நின்றவர்தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டின் வலி நிவாரணியாக இருந்து மக்களை பாதுகாத்து வருகிறார். இதனால் எதிர்க்கட்சி தலைவரின் எண்ணத்தில் மண் விழுந்து விட்டது. இவர்கள் நினைத்த மின் தடையும் இல்லை. எங்கும் தண்ணீரும் தேங்கவில்லை.பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தன் இருப்பினை காட்டிக்கொள்ளவதற்காக பேசி வருகிறார்.”

Also Read: “காலநிலை மாற்ற வீராங்கனைகள்” திட்டத்திற்கு ரூ. 3.87 கோடி ஒதுக்கீடு! : தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!