Tamilnadu

”ஈஷா வழக்குகளை மாநில அரசு நடத்தலாம்” : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஈஷா யோகா மையம் சென்ற தனது மகள்களை காணவில்லை என கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஈஷா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 2 நாட்களாக ஈஷா யோக மையத்தில் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஈசாவுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை பட்டியலிட்டார். மேலும் ஈசா மையத்தில் அனுமதி இல்லாமல் தகன மேடை செயல்பட்டு வருகிறது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். மேலும் பதில்மனுவில் விரிவான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பின்னர் நீதிபதிகள், ”ஈசா மீது நிலுவையில் உள்ள FIR தொடர்பான வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. அது தொடர்பான விசாரணைகளை மாநில அரசு நடத்தலாம். இது அவர்களது கடமையாகும்” என உத்தரவிட்டனர்.

மேலும், காமராஜ், அவரது மனைவி இருவரும் ஈசா சென்று மகள்களை சந்திக்க எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Also Read: பா.ஜ.க MLA-வை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் : காரணம் என்ன?