Tamilnadu

வடகிழக்குப் பருவமழை - அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் வாயிலாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பருவமழையின் போது பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், பழைய கட்டடங்களைப் பொதுப்பணித்துறை மூலம் அகற்றும் பணி காலாண்டுத் தேர்வு விடுமுறையின் பொது தொடங்கப்பட்டது. அப்பணிகளை விரைவுபடுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் நிரம்பியுள்ள இடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகுந்த பாதுகாப்பு அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினார்.

Also Read: ”உங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்கிறீர்கள்" : முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன தூய்மைப் பணியாளர்!