Tamilnadu

”எந்த மழை வந்தாலும் அதை சந்திக்க அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

கொளத்தூரில் சிறப்புப் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”எவ்வளவு மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. மழையின் போது, மக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

மழை பாதிப்பை சிலர் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். இதை வியாபார பொருளாக்க நினைக்கிறார்கள். இவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று மக்களுக்கு தெரியும்.

ஏறக்குறைய எல்லா இடங்களிலும் தண்ணீர் வடிந்துவிட்டது. எங்களுக்கு தெரியாமல் சில இடங்களில் தண்ணீர் இருந்தால் அதுவும் உடனே அகற்றப்படும். மக்கள் பாராட்டும் அளவிற்கு மாநகராட்சியின் பணி இருந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மழை நிவாரண பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்தினார்.

Also Read: 2 நாளில் 14,84,735 பேருக்கு உணவு : பெரும் மழையிலும் மக்கள் பசியாற்றிய அரசு!