Tamilnadu

முதலீடுகளை விரைவில் செயல்படுத்தும் வகையில் வணிக விதிகளில் திருத்தம் - தமிழ்நாடு அரசிதழில் வெளியானது !

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்கள் கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிகளை எளிதாக பெரும்வகையில் தமிழ்நாடு வணிக விதிகளின் படி குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அதிக உயரம் இல்லாத கட்டடங்களில் கட்டுமான திட்டத்தை மாற்றுதல், கூடுதலாக சேர்த்தல், திருத்தம் செய்தல், மறுமதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கான அனுமதியை, டி.டி.சி.பி., எனப்படும் நகர ஊரமைப்பு துறை, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

அதிக உயரம் உள்ள கட்டடத்திற்கு, அதன் தலைமை அலுவலக அளவில், 90 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்பட வேண்டும். சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், 10,764 சதுர அடிக்கு குறைவான கட்டடங்களுக்கு, 45 நாட்களுக்குள் அனுமதி தர வேண்டும். அந்த அளவு அல்லது அதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு, 55 நாட்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி, 30 நாட்களுக்குள், நகராட்சி நிர்வாக ஆணையரகம் 45 நாட்களுக்குள், பேரூராட்சி இயக்குனரகம் 45 நாட் ஊரக வளர்ச்சி இயக்குனரகம் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். கட்டடத்தை இடித்து புனரமைப்பதற்கானஅனுமதியை, சென்னை மாநகராட்சி 30 நாட்களுக்குள், நகராட்சி நிர்வாக ஆணையரகம் 45 நாட்களுக்குள், பேரூராட்சி இயக்குனரகம், 45 நாட்களுக்குள், ஊரக வளர்ச்சி இயக்குனரகம், 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

அரசு ஆதாரங்களில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதியை, 75 நாட்களுக்குள், நீர்வளத் துறை வழங்க வேண்டும்.தண்ணீர் வழங்கப்படாததற்கான சான்றை, சென்னை குடிநீர் வாரியம், தமிழக குடிநீர் வாரியம், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி பஞ்சாயத்து இயக்குனரகம், இரு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்த வழக்கு விரைவில் விசாரணை - உச்சநீதிமன்றம் உறுதி !