Tamilnadu

”அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து சாலையில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. நேற்று முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முழுவதும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஒரு முன்கள வீரராய் 360 டிகிரியில் நேற்று முன்தினம் இரவில் இருந்து அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை மேற்கொண்டு, சென்னை முழுவதும் சூறாவளியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2 நாட்களில் 300 நிவாரண முகாம்களில் 1000க்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 7 லட்சத்து 18 ஆயிரத்து 885 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மா உணவகங்களில் 2 நாள் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: கொட்டித் தீர்க்கும் கன மழை : சுற்றிச் சுழன்று மக்கள் பணியாற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!