Tamilnadu

மழைநீர் தடுப்பு பணிகள் தான் வெள்ளை அறிக்கை! : துணை முதலமைச்சர் பதிலடி!

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், கடந்த 3 மாதங்களாக தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கபட்ட பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், நீர்வள மேலாண்மை பணிகளாலும், பெரும் பாதிப்பு ஏற்படாமல் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டது.

சென்னை மாநகரில் நேற்று 131 மி.மீ அளவில் தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை பொழிந்தும் சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டன.

இந்நிலையில், மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, “சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை; இதுவே வெள்ளை அறிக்கை தான்!” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், “இன்று அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் மிதமான மழையே பெய்து வருகிறது. அதி கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: நாளை சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : வானிலை ஆய்வு மையம் கூறியது என்ன ?