Tamilnadu

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர்கள் நாளை பணிக்கு திரும்புவர்- CITU தொழிற்சங்கம் அறிவிப்பு !

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் ஊதிய உயர்வு, சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று கோட்டையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு பணிக்கு திரும்புவர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாம்சங் சிஐடியு தொழிற்சங்க பேரவை கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாநில தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நேற்று தலைமை செயலகத்தில் நாலு அமைச்சர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் இரு தரப்பு கருத்துக்களும் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை சில அறிவுரைகளை இருவருக்கும் அளித்தது. இதில் நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் அவர்களது கோரிக்கை குறித்த பதிலுரையை தொழிலாளர் நலத்துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தது.

அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற தொழிலாளர் பேரவை கூட்டத்தில் நாளை முதல் பணிக்கு திரும்புவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.நிர்வாகம் தங்களது பதிலினை தொழிலாளர் நலத்துறை இடம் அளித்த பின் எத்தனை கோரிக்கைகள் ஏற்கப்பட்டது என்பது தெரியவரும்"என்று தெரிவித்தார்.

Also Read: முடிவுக்கு வந்தது சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் : அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு !