Tamilnadu

கன மழை : 360 டிகிரியில் களத்தில் மக்களுடன் துணை நிற்கும் தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் இந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகவே தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவில் இருந்தே சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மீட்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில், சென்னை யானைகவுனி பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று நள்ளிரவில் இருந்தே, கட்டுப்பாட்டு மையம், கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

அதேபோல், மழைகாலத்தில் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படாத வகையில் தமிழ்நாடு முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மீட்புப்பணியில் ஈடுபட 26 பேரிடர் மீட்புக்குழுக்கள் மற்றும் 219 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 300 நிவாரண மையங்களும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் என மொத்தம் 931 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட பதிவு செய்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். சாலையில் தேங்கும் மழைநீர் ராட்சத மோட்டார்களை கொண்டு உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் சாலையில் விழுந்த மரங்களும் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீராக இயக்கப்பட்டு வருகிறது.

Also Read: கன மழை : ”துரித நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!