Tamilnadu

Rain Alert : “16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு உள்ளது” - உணவுப் பொருள் வழங்கல் பாதுகாப்புத் துறை!

தமிழ்நாட்டில் இந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாளை (அக்.15), அக். 16 ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக முனைப்புக் காட்டி வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இயற்கை இடர்பாடுகள் நடந்தால், அவசர உணவுத் தேவைக்கென அரசு கிடங்குகளில் 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு உள்ளதாக தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :

வடகிழக்கு பருவ மழை 2024-ல் எதிர்நோக்கக்கூடிய இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விவரம்:

* இயற்கை இடர்பாடுகள் நேரிடின் அவசர உணவுத் தேவைக்கென அரசு கிடங்குகளில் 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு உள்ளது.

* தற்போது செயல்பட்டு வரும் 37,047 நியாயவிலைக் கடைகளில் 2,025 நியாயவிலைக் கடைகள் தாழ்வான பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன என கண்டறியப்பட்டு வெள்ள அபாயம் ஏதேனும் நேரக்கூடிய சூழ்நிலையில் இக்கடைகள் செயல்பட ஏதுவாக உயர்வான பகுதிகளுக்கு மாற்றியமைக்க தகுதியுள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட நியாயவிலைகடைகளில் சுமார் 780 நியாயவிலைக் கடைகள் கடலோர பகுதிகளில் இயங்குகின்றன.

* தாழ்வான பகுதிகளில் நியாயவிலைக் கடைகள் செயல்படும் இடங்களில் உள்ள அரசு செயல்முறை கிடங்குளில் இரண்டு மாதங்களுக்கான இன்றியமையாப் பண்டங்களின் தேவை அளவு மிகை இருப்பாக வைக்கப்படுகிறது.

* மாவட்டம் ஒன்றுக்கு 20,000 பைகள் வீதம் 5 கிலோ அரிசி கொள்ளக்கூடிய பைகள் எளிதில் கொண்டு செல்லும் வண்ணம் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.

* இயற்கை பேரிடர் ஏற்படும் சூழ்நிலையில் பண்டங்களை நகர்வு செய்யவும் தேவைப்படும் இடங்களுக்கு வழங்கவும் உரிய போக்குவரத்து முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

* தீயணைப்பு மற்றும் அவசர உதவி வாகனங்களுக்கு வழங்கிடும் வண்ணம் மாதம் ஒன்றுக்கு 3,170 லிட்டர் மண்ணெண்ணெய் சிறப்பு ஒதுக்கீடாக ஜனவரி 2025 வரை வழங்கப்படுகிறது.

* கடலோரத்தில் அமைந்துள்ள 15 மாவட்டங்களுக்கு மாவட்டம் ஒன்றுக்கு 12,000 லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் கூடுதல் ஒதுக்கீடு வழங்கி அதனை மிகை இருப்பாக வடகிழக்கு பருவ மழை காலம் முழுவதும் வைத்திருந்து, தேவைப்படும் சமயம் உபயோகப்படுத்தும் வண்ணம் இருப்பு பராமரிக்கப்படுகிறது.

* தகவல் தொலைதொடர்பு தடையின்றி கிடைக்க செல்போன் கோபுரங்கள் தொடர்ந்து இயங்கும் வண்ணம் அக்கோபுரங்களுக்கான மின் ஜெனரேட்டர்களுக்கு தேவைப்படும் எரிபொருளினை வழங்க வழிவகை செய்ய இந்திய எண்ணெய் கழகத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர எண்ணெய் கழகங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

* வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடும் ஹெலிகாப்டர் வானூர்திகளுக்கு தேவைப்படும் எரிபொருளினை மாவட்ட அளவில் போதிய அளவு இருப்பு வைத்து வழங்கும் பொருட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

* மாவட்ட அளவில் எண்ணெய் நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் மாவட்டங்களில் செயல்படும் பெட்ரோல் / டீசல் முகவர்களின் முகவரி, தொலைபேசி / செல்பேசி எண்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வழங்கப்பட்டு, அவர்தம் மாவட்டங்களில் பெட்ரோல் / டீசல் தட்டுப்பாடின்றி கிடைக்க அவ்வப்போது அம்முகவர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Also Read: Red Alert... அடுத்தடுத்த நாட்களில் தொடர் கனமழை... வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுவது என்ன?