Tamilnadu

”பொதுமக்கள் அவசர கால மையத்தை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்” - அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் !

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி முதலமைச்சர் தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய சொல்லி அரசு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளார்கள்.

நம் பேரிடர் மேலாண்மை துறை மூலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள், முதலமைச்சரும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். வரும் 15,16 மற்றும் 17 ஆம் தேதிகளில் கனமழை இருக்கும் என்றும் குறிப்பாக சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அதிக கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இந்த மழையை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. திருச்சியில் விமானம் தரையிறங்குவதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் 18 ஆம்புலன்ஸ், 3 தீயணைப்பு வண்டிகளையும் திருச்சி விமான நிலையத்திற்கு முன்னெச்சரிக்கை அனுப்பி வைத்தோம்.

அதேபோல் நேற்று நடைபெற்ற ரயில் விபத்துக்காக தனியார் மண்டபங்களை ரயிலில் பயணம் செய்த பயணிகளை தங்க வைப்பதற்காக ஏற்பாடு செய்து வைத்தோம். மேலும் 20 பேருந்துகளை தயாராக வைத்து பயணிகளை அவர்கள் ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தோம்.

அதேபோல் வரும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள இந்த அரசாங்கம் தயாராக உள்ளது.TN ALERT செயலி தயாராக உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயாராக உள்ளனர். எந்த பகுதியில் பாதிப்பு இருக்கும் என்று தெரியவருகிறதோ அங்கு முன்னதாகவே அவர்களை அனுப்பி வைக்க இருக்கிறோம்.

இந்த பேரிடர் காலங்களில் உணவு, பால், குடிநீர் போன்ற உணவுப் பொருள்களை மழை பெய்வதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கையாக வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.பருவமழை பாதிப்புகளில் உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 60,000 மேற்பட்ட தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் பிரச்சினைகளை தெரிவித்தால் எந்த துறை சார்ந்த பிரச்சினை ஆக இருந்தாலும் அந்த துறைக்கு அது தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்களும் எந்த நேரமும் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பதில் கிடைக்கப் பட்டதா என்பதும் கவனிக்கப்படும். கடந்த முறையை வானிலை ஆய்வு மையம் எதிர்பாக்காத அளவிற்கு மழை பெய்துள்ளது என்பதை அவர்களை ஒப்புக் கொண்டார்கள். இந்த முறை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தொடர்பில் தான் உள்ளார்கள்"என்று கூறினார்.