Tamilnadu

புதையலுக்கு ஆசைப்பட்டு 20 அடி குழிக்குள் விழுந்த இளைஞர் : பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பங்களா பாடி பழங்குடியின கிராமத்தில் வெள்ளை என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீடு நீண்ட காலமாக பூட்டியே உள்ளது.

இந்நிலையில் அந்த வீட்டின் மையப் பகுதிகள் இருந்த 20 அடி குழிக்குள் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து வெளியே வர இயலாமல் உயிருக்கு போராடி வருவதாக கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழி மிக குறுகியதாக இருந்ததால் உள்ளே இறங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்பதனால் தீயணைப்பு வீரர் ஆக்சிஜன் பொருத்திக்கொண்டு குழிக்குள் இறங்கினார்.

இருந்தும் குழிக்குள் தொடர்ந்து மண் சரிந்து கொண்டிருந்ததனாலும், மழை பெய்ததனாலும் மீட்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் நீண்ட நேரம் போராடி இளைஞரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் அந்த இளைஞரை முதலுதவி சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பயன்பாடற்றுக்கு கிடந்த வீட்டில் புதையல் ஏதேனும் உள்ளதா? என்றும் யாரேனும் குழி தோண்டி இருக்க கூடும் என நினைத்து எட்டிப்பார்த்தபோது சுப்பிரமணி என்ற இளைஞர் குழிக்குள் விழுந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: "உலகமே தற்போது பாகிஸ்தான் அணியை பார்த்து சிரிக்கிறது" - பாக்.முன்னாள் வீரர் காட்டம் !