Tamilnadu

இன்னும் ஒரு வாரத்திற்கு மழை : வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை என்ன?

மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (11-10-2024) காலை மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மஹாராஷ்ட்ரா கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுபெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 13-ஆம் தேதி காலை வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

இதனால், அடுத்த ஏழு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல், நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்.13 முதல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: முரசொலி செல்வம் கடைசியாக முரசொலிக்கு எழுதிய பெட்டிச் செய்தி : விவரம் உள்ளே !