Tamilnadu

தி.மு.க.வையும், முரசொலியையும் வளர்த்தவர் முரசொலி செல்வம்! : செல்வப்பெருந்தகை புகழஞ்சலி!

திராவிட முன்னேற்றக் கழகத்தையும், முரசொலியையும் செதுக்கியதில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு தூணாய் முரசொலி மாறன் இருந்தது போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொள்கைத் தூணாய் இருந்த முரசொலி செல்வம் வயது முதிர்வு காரணமாக மறைவுற்றுள்ளார்.

இதற்கு, தி.மு.க.வினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறையினரும் மற்றும் இதர வல்லுநர்களும் நேரில் வருகைத் தந்து, முரசொலி செல்வத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அஞ்சலி செலுத்தியதற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, “அருமை அண்ணன் முரசொலி செல்வம் 50 ஆண்டுகள் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் தி.மு.க.வையும், முரசொலியையும் வளர்த்தவர்.

அவர் கண்ணுக்கு தெரியாத கதாநாயகன். என்னைப் பொறுத்தவரை சட்டமன்ற விவாதங்களில் நான் பங்கேற்கும் போது அதை தொலைக்காட்சிகளில் பார்த்து பாராட்டுவார். அப்படிப்பட்ட மகத்தான முரசொலி செல்வத்துக்கு எங்கள் அஞ்சலிகள்.

சட்டப்பேரவை கூண்டில் ஏற்றப்படும் பொழுதுக்கூட அதை துணிச்சலுடன் எதிர்க்கொண்டவர். அவரது மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆழ்த்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஜப்பானிய அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு!