Tamilnadu

முரசொலி செல்வத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எழுத்தாளரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று (அக்.10) பெங்களூருவில் காலமானார். தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராகவும், பத்திரிகை துறையிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதித்த முரசொலி செல்வம், முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற பெயரில் தொடர்ந்து கட்டுரைகளும் எழுதி வந்தார். முரசொலி நாளிதழுக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்மாலை வைத்து அஞ்சிலி செலுத்தினர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பி.வாசு, பார்த்திபன், நடிகர்கள் ராஜேஷ், விஜயகுமார், தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் கோபாலபுரத்தில் இருந்து காவேரி மருத்துவமனை வழியாக, சென்று திரு.வி.க பாலத்தில் இருந்து இடது புறமாக சென்று பெசன்ட் நகர் மின் மயானம் சென்றது.

பிறகு மின் மயானத்தில் முரசொலி செல்வத்தின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்களின் இறுதி அஞ்சலியை தொடர்ந்து முரசொலி செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Also Read: தி.மு.க.வையும், முரசொலியையும் வளர்த்தவர் முரசொலி செல்வம்! : செல்வப்பெருந்தகை புகழஞ்சலி!