Tamilnadu

தெறிக்க விடலாமா... சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகசம்... அனைத்திலும் சாதிக்கும் தமிழ்நாடு!

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகளை நிறைவு செய்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 08-ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதனை முன்னிட்டு இந்த ஆண்டு சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி இன்று (அக்.06) நடைபெற்றது.

இந்த விமான சாகச நிகழ்ச்சியானது தமிழ்நாட்டில் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நிலையில், இதனை கண்டுகளிக்க பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பிய விமானப்படையும் மக்களுக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி இந்த நிகழ்ச்சி இன்று (அக்.06) காலை 11 மணி முதல் பகல் 01 மணி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வை காண மெரினாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இந்த நிகழ்வை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.-க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் சுகோய், தேஜஸ், ரஃபேல், ஜாகுவார் உள்ளிட்ட பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. இந்த அனைத்து விமானங்களும் வானில் பறந்துகொண்டே இந்தியாவின் மூவர்ண நிற பொடியை வானில் தூவிக்கொண்டே சாகசங்களில் ஈடுபட்டன.

குறிப்பாக, வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து ஆச்சர்யப்படுத்தும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபட்டு மெய்சிலிர்க்க வைக்கும் சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்றன.

பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்புகளும் கொடுத்ததோடு, எந்த வித பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வானெங்கும் விமானப்படையின் சாகசம் மக்கள் கண்ணுக்கு தெரிந்த வண்ணமாகவே இருந்தது.

மக்கள், வெயில் காரணமாக குடைகளை பிடித்தபடி விமான சாகசத்தை கண்டு ரசித்தனர். கூட்டத்தை ஒழுங்கு செய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். வரலாற்றில் முக்கிய விமான சாகச நிகழ்ச்சியாக சென்னையில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கருதப்படும் நிலையில், பல லட்சம் பேர் பார்வையிட்டதால் ‘லிம்கா’ சாதனை புத்தகத்தில் (Limca Book of Record) இடம்பெறுகிறது. இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை நேரில் கண்டுகளித்த பொதுமக்களில் பலரும் தாங்கள் முதல் முறை, அதுவும் நேரில் பார்த்தது மகிழ்ச்சி என்று தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது நிறைவடைந்துள்ள இந்த நிகழ்வை கண்ட அனைவரும் தங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அணுபவமாக இது இருப்பதாக கருதுகின்றனர்.

Also Read: 21 ஆண்டுகளுக்கு பிறகு... சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்த விமான சாகச நிகழ்ச்சி -குவியும் பாராட்டுகள்