Tamilnadu

வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? : அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதிகமாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போதே படகுகள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அதோடு தன்னார்வலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்.10 ஆம் தேதிக்குள் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டுவிடும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதையடுத்து அனைத்து மண்டலங்களுக்கும் கொசு ஒழிப்பு பணிகளுக்காக ரூ.67 லட்சம் மதிப்பில் கூடுதலாக கையினால் இயக்கும் 100 புகைப்பரப்பும் இயந்திரங்களை அமைச்சர் கே. என். நேரு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, ”அக்.10 ஆம் தேதிக்குள் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டுவிடும். 12 இயந்திரங்கள் மூலம் கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு வருகிறது.

தாழ்வான பகுதிகளில் 990 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 280 மரம் அகற்றும் இயந்திரங்கள் தயார்.மேலும், மழைக்காலங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அவசர பணிகள் தவிர மற்ற சாலை வெட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொசுக்களால் பரவும் நோய்த்தடுப்பை ஏற்படுத்த தற்காலிக பணியாளர்கள். கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ. 67 லட்சம் மதிப்பில் கூடுதலாக கையினால் இயக்கும் 100 புகைபரப்பும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Also Read: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சொல்வது என்ன?