Tamilnadu

பழனி கோயில் விவகாரம்: “அரைவேக்கட்டுத்தனமாக பேசக்கூடாது” - எச்.ராஜா பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் மண்டபத்தில் நவராத்திரி விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நவராத்திரி பெருவிழா ஏற்பட்டு செய்யப்பட்டது. இந்த நவராத்திரி பெருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, கோயில் விழாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சித்தர்கள், ஆன்றோர் சான்றோருக்கும் விழா எடுக்கப்படுகிறது. அந்த வகையில் நவராத்திரி பெருவிழா 2-ம் ஆண்டாக மயிலாப்பூரில் தற்பொழுது நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 12 சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பழனி திருக்கோயில் கோபுரம் ஐந்து நிலை கோபுரம் 64 அடி உயரம் கொண்டது. சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. திருக்கோயில் குடமுழுக்கையொட்டி கோயில் கோபுரமும் கடந்த ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டது. இதனை பதினோரு உபயதாரர்கள் புனரமைப்பு செய்தார்கள். இதற்கு 75 லட்சம் செலவு செய்தார்கள். இதனை உபயோதாரர்கள் தான் உணர அமைத்தார்கள் தவிர கோவில் சார்பில் புனரமைப்பு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பகுதியில் பெரு மழை பெய்தது. அப்பொழுது கோபுரத்தின் இடிதாங்கி அருகே இருக்கக்கூடிய சிறிய சிற்பம் சேதமடைந்தது. இதுகுறித்து துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆகம விதிப்படி சம்ரோஷணம் மேற்கொள்ளப்பட பிறகு வரும் 24-ம் தேதி சீரமைப்பு செய்யப்படும். இது எதிர்பாராமல் நடந்த சூழல் இதற்கும் ஊழலுக்கும் சம்பந்தமே கிடையாது.

பழனி கோவில் கோபுரத்தை புனரமைப்பு செய்தது யார்? அதற்கான நிதியை கொடுத்தது யார்? என்று கூட தெரியாமல் எதற்கெடுத்தாலும் அவசரப்பட்டு அரைவேக்கட்டுத்தனமாக பாஜக எச்.ராஜா பேசியுள்ளார். சின்ன பிரச்னையை ஊதி பெரிதாக்கி மக்களிடையே ஒரு பதற்றத்தை கொண்டு சேர்ப்பது தான் இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் வேலை. பாஜகவுக்கு பொறுப்பு தலைவராக இருப்பவர், தற்போது பொறுப்பாக அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த உபயோதாரர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இருக்கிறார். உபயதாரர் நிதியில் செய்யப்பட்டாலே அவர்களே தான் ஒப்பந்ததாரை நியமித்து பணியை செய்வார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும்தான் கோவில் சார்பில் செய்யப்படும். பணியை மேற்பார்வையிடும் பொறுப்பை கோவில் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும். இதில் எந்தவிதமான தவறுக்கும் இடமில்லை.‌ இது இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட விளைவுதான் என்பதை அழுத்தம் திருத்தமாக எச்.ராஜாவுக்கு கூறிக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் இரண்டே மாதத்தில் மழை நீர் ஒழுங்குகிறது. மழைநீர் வடிகால் முழுமையாக அமைக்கப்படாததால் கோவில் முழுவதும் தண்ணீர் நிற்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்திரபதி சிவாஜிக்கு கட்டப்பட்ட ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான சிலையை பிரதமர் திறந்து வைத்த மூன்று மாத காலத்தில் உடைந்து சின்னாபின்மானது. இது யாருடைய ஆட்சியில்... ரூ.900 கோடியில் கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் குடைபிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது யாருடைய ஆட்சியில்.

இது போன்ற சூழல் தமிழகத்தில் இல்லை. ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பக்தர்கள், மக்கள் இந்த ஆட்சியின் தரத்தை அறிந்து தான் தரம் இல்லாத பாரதிய ஜனதாவை நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் மன்றத்தில் இருந்து மக்கள் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.” என்றார்.

Also Read: செப்டம்பர் மாதம் பதிவுத்துறையில் ரூ.1121 கோடி கூடுதல் வருவாய் : அமைச்சர் பி.மூர்த்தி தகவல்!