Tamilnadu

“புத்தகத்திற்கு என்று தனியாக ஒரு இடம்..” -தூத்துக்குடி வரலாறு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

தூத்துக்குடியில் உள்ள சங்கரபேரி பகுதியில் நடைபெறும் புத்தகத் திருவிழா அக்டோபர் 3 தேதி துவங்கி வருகிற 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., பேசியதாவது, “சமஸ்கிருதம் படிச்சாதான் இந்தியாவையே புரிஞ்சிக்க முடியும். சமஸ்கிருதம் தான் இந்தியா என்ற கருத்தை பரப்பிக் கொண்டிருந்த சமயத்திலே முதல் முதலாக அதற்கு எதிராக எழும்பிய குரல் தூத்துக்குடியில் இருந்து ஒலித்த கால்டுவெல் குரல் தான். திராவிடத்தின் தனித்தன்மையை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் தூத்துக்குடி மாவட்டம்.” என்றார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, “தூத்துக்குடி மண்ணின் வரலாற்றை நீங்கள் புரட்டிப் பார்த்தால் அதிலே புத்தகத்திற்கு என மிக முக்கியமான இடம் இருந்துள்ளது. இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் தொல்லியல் சிறப்பும், இலக்கிய சிறப்பும் கொண்ட நகரமாகும். நமது தூத்துக்குடிக்கு அருகே உள்ள புன்னக்காயில் பகுதியில் 1586 ஆம் ஆண்டில் முதல் அச்சுக்கூடம் அமைக்கப்பட்டு அடியார் வரலாறு என்ற புத்தகம் முதன்முதலாக அச்சடிக்கப்பட்டது.

இதன் மூலம் எல்லோரும் கூறுவது போல தமிழில் விவிலியம் அச்சடிக்கப்படுவதற்கு முன்பாகவே ஒரு புத்தகம் இம்மண்ணில் அச்சடிக்கப்பட்டிருப்பது நிரூபினமாகிறது. இந்த மாவட்டத்திற்கு இருக்கக்கூடிய மிகப்பெரும் பெருமை தாமிரபரணி நதியாகும். இங்கிருந்து தான் தென்னிந்தியாவின் பல நாகரிகங்கள் உருவாகியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முதலாக அகழ்வாராய்ச்சி நடந்த இடம் ஆதிச்சநல்லூர்.

இந்த பகுதியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததை அங்கு கிடைத்திருக்கக் கூடிய பல்வேறு தொல் பொருட்கள் நமக்கு சொல்கிறது. குறிப்பாக மிக உயர்ந்த தரத்திலான வெண்கலம், தங்கத்திலான பொருட்கள் கிடைத்துள்ளது. அதிலும், இந்திய அளவில் தங்கத்திலான நெற்றிப்பட்டைகள் அதிகம் கிடைத்த இடம் ஆதிச்சநல்லூர்.

இந்த புத்தகத் திருவிழா புதிய படைப்பாளிகளை கொண்டாடும் வகையில் மட்டுமல்லாது, இயற்கை வளங்களை காப்பதற்கும் வழி வகுத்துள்ளது. இதன் வாயிலாக நமது வரலாற்றையும், புவியியல் வளத்தையும், இயற்கை சூழலியலையும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

Also Read: தூத்துக்குடியில் 5-வது புத்தக திருவிழா தொடக்கம் : அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேக ஏற்பாடு -முழு விவரம்!