Tamilnadu

“எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ...” - சீமானுக்கு எதிராக போர் கொடி தூக்கிய நாதக நிர்வாகிகள் !

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கட்சியில் இருந்து விலகி இருப்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து நாதக கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் கூறுகையில், “14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம். ஈழ மக்களை காப்பாற்ற கட்சியை ஆரம்பித்தோம். தற்போது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்காக நிற்கிறோம். அதற்காக பல்வேறு வழக்குகளை சந்தித்து சிறைக்கு சென்று உள்ளோம். கிருஷ்ணகிரி மண்டலத்தில் 20,000 பேரை உறுப்பினர்களாக இணைத்து 1 லட்சம் வாக்குகளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாங்கியுள்ளோம்.

கட்சி ஆரம்பித்த பொழுது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை. தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக வளர்ந்த பிறகு, தற்போது செயல்பாடுகள் சரி இல்லை. யாருக்கும் அங்கீகாரம் கிடைக்கக் கூடாது என உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். தமிழகத்தில் எந்த பொறுப்பாளர்களையும் அழைத்து சீமான் ஆலோசனை நடத்தவில்லை.

கடந்த 14 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு தங்கள் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தெரியாதா? நாம் தமிழர் கட்சியில் பழைய ஆட்கள் நிராகரிக்கப்படுவதன் காரணம் என்ன? எங்கள் இளமை காலம் முழுவதும் கட்சியில் உழைப்பில் போய்விட்டது. மாற்று கட்சியில் உள்ள எங்கள் உறவினர் நல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் சீமான் மட்டும் அனைத்து கட்சியினர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

நாங்கள் பிச்சை எடுத்து கட்சிக்கு நிதி கொடுத்தால், கட்சியை பாக்யராஜ் என்ற தனி நபர் பெயரில் பதிவு செய்து உள்ளார். நாம் தமிழர் கட்சியில் யாரும் வளர கூடாது என சீமான் நினைக்கிறார். சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார் என கருதுகிறோம். தனிப்பட்ட ஆதரவாளர்களை நாங்கள் திரட்டாமல் இருந்ததால் தற்போது எங்களை ஓரங்கட்ட முயற்சி செய்கின்றனர்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சியில் கட்டுப்பாடு இல்லை. கட்சிக்காக உழைத்து சிறை சென்றவர்களை காப்பாற்ற என்ன செய்தார்கள்? எளிமையான அரசியல் இல்லை. மாற்றுக் கட்சியினர் அழைத்தால் அவர்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு செல்லும் சீமான், நாம் தமிழர் கட்சினர் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை.

கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார். இல்லையென்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து ‘புதிய தமிழ் தேசிய இயக்கம்’ என்ற ஒன்று அமைக்கப்படும். செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் என்ற பெயரில் கையெழுத்து மட்டுமே வாங்கப்படுகிறது. மாதம் ரூ.2.5 லட்சம் வாடகை, 3 பேருக்கு 15 வேலை ஆட்கள் என சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளில் கூட்டணிகளோடு ஆட்சி அமைத்தார். ஆனால் 14 ஆண்டுகளாக தனித்து போட்டியிட்டும் ஒரு எம்எல்ஏ கூட பெற முடியவில்லை. கூட்டணி வைத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என சீமானுக்கும் தெரியும். ஆனாலும் அதனை செய்யவில்லை. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ, தெரியாமல் இவரிடம் வந்து மாட்டிக்கொண்டு 14 வருட வாழ்க்கையை இழந்து விட்டோம். இளைஞர்கள் யாரும் எங்களை போல் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும் கட்சியில் இருந்தும் விலகுவதாகவும், பழையபடி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார் என்றும் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இவ்வாறு தெரிவித்துள்ளது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விளையாட்டினை வளர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது - துணை முதலமைச்சர் உதயநிதி !