Tamilnadu

தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் இனியும் தொடரும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விருதுநகரில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,“தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் வழங்குவது ஒரு பெருமை என்றால்; மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு மேட்டார் வாகனம், 2000 மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது கூடுதல் பெருமையாகும்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்க முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு மட்டும் ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உலக அளவில் சாதனைகளை படைத்து வருகிறார்கள்.

இந்திய அளவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை முதல் முறையாக தமிழ்நாடு அரசு நடத்தி காட்டியது. போட்டியை நடத்துவது மட்டுமல்லாது, அப்போட்டியில் பங்கேற்று மொத்தம் 98 பதக்கங்களை வெற்று தமிழ்நாடு முதல் முறையாக 2 ஆம் இடம் இடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இந்த சாதனைகள் இனியும் தொடரும்.

தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில், முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். அதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் விரைவில் வழங்க உள்ளார்.

திராவிட மாடல் அரசின் அனைத்துத் துறைகளும் சாதனைப் படைத்து வருகிறது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி வேலைவாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்பையும் கொண்ட மாநிலமாக இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இதன்மூலம் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டுகிறது.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Also Read: முல்லைப் பெரியாறு அணை - மக்களை குழப்பும் பழனிசாமி : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!