Tamilnadu

“சீண்டிப் பார்க்காதே... எழுந்தால் கதை வேறு...” - கனிமொழி எம்.பி. ஆவேச பேச்சு!

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட ஐ.சி.எப் பகுதியில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பில் நேற்று (30/09/2024) தமிழர்களின் சுடர்- திராவிடர் தொடர் பவளவிழா ஆண்டின் கழக முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் "திராவிட நெடுந்தொடர் – பெண்ணின் உயர்வே மண்ணின் உயர்வு! பெருமை சேர்ப்பதே திராவிட உணர்வு!!" என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலையில், சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதா தீனதயாளன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மகளிர் அணி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், 15 மகளிரணி நிர்வாகிகளுக்கு இருசக்கர வாகனங்களும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது, “ஒரு இயக்கம் 75 ஆண்டுகளைக் கடந்து இன்றும் நிலைத்து இருக்கிறது என்றால் அந்த இயக்கத்தின் வரலாறு, தியாகத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

பெரியாரின் கொள்கைகளை, கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இருப்பதினால் தான் திமுக 75 ஆண்டுகளைக் கடந்து இன்று பவள விழாவைக் கொண்டாடி இருக்கிறது. அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை, பெரியார் தொடங்கி தற்போது வரை திராவிட கருத்துக்கள் பேசுபவர்களைக் காவி சட்டை கும்பல் அச்சுறுத்த முயற்சிக்கிறது. சீண்டிப் பார்க்காதே, பார்க்க அமைதியாக இருப்போம், எழுந்தால் கதை வேறு. தமிழ்நாட்டில் சின்ன சின்ன ஊர்களில் கூட கல்லூரிகளைத் தொடங்கி பெண்களைப் படிக்க வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதனைத் தொடங்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.

புதிய கல்விக் கொள்கையில் கல்லூரியில் சேர வேண்டும் என்றாலும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என உருவாக்கி நாம் கட்டிய கல்லூரியில் நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது என நினைப்பது ஒன்றிய பாஜக ஆட்சி. நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்பதைச் சரியானது. திட்டங்களின் செலவு முக்கியமில்லை பெண்களின் விடுதலை தான் முக்கியம் என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர்.

அந்த வழியில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளின் உணவை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வேலைக்குச் செல் சகோதரி என சொன்ன சகோதரர் தான் நம் முதலமைச்சர். நீங்கள் பெண்களைப் போற்ற வேண்டாம், சமமாக நடத்துங்கள். தொடர்ந்து பெண்களின் உண்மையான முன்னேற்றத்திற்காக, உரிமைக்காக இருக்கும் ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அடுத்த தேர்தலில் திராவிட இயக்கத்தின் வெற்றிக்காக, திமுக வெற்றிக்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்” என்றார்.

Also Read: "சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ்?" : ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!