Tamilnadu

“சனாதன எதிர்ப்பு போராளி...” - துணை முதலமைச்சருக்கு தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் வாழ்த்து!

சனாதன எதிர்ப்பு போராளி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வராக பதவியேற்பு! அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், சனாதன எதிர்ப்பு போராளி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான வாழ்த்து அறிக்கை வருமாறு :

“ஆரியத்திற்கு எதிராக போர் செய்வோம்! சமத்துவ சமூக நீதியை கருவறையில் நிலை நாட்டுவோம்!

சனாதனம் என்றால் நிரந்தரமாக மாறாதது நிலையானது என்று பொருள். மாறாமல் நிரந்தரமாய் உள்ள சாதி வர்ணாசிரம கட்டமைப்பை, மாற்றி எல்லோரையும் சமத்துவம் நிறைந்த மனிதர்களாக மாற்றுவதற்காக, கொள்கை உறுதியோடு பேசி பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கைகளின் வழிவந்த உதயநிதி ஸ்டாலின் அவர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக நியமனம் செய்திருப்பது, தமிழக அரசியலில் இளைஞர்களின் அத்தியாயம் தொடங்கியதை குறிக்கிறது.

கோயிலில் உள்ள அதிகாரத்தை வைத்துதான் தமிழ் சமூகத்தில், சாதிய வர்ணாசிரம கட்டமைப்பு நிலை நிறுத்தப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் ஆலயங்களில், தங்களைத் தவிர யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று நிலையான சனாதன அதிகாரத்தை கொண்டுள்ளார்கள். குறிப்பிட்ட சில ஆயிரம் பேர். இறைவனின் ஆலயங்களில், சமத்துவத்தை நிலை நாட்டுவதே சமூகநீதி.

அனைத்து திட்டங்களுக்கும், செயலாக்கம் தரத்தக்கவர் என்ற வகையில், அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் பெரிய கோயில்களில் நிறைவேற்றுவார் என்ற நம்புகிறோம். அவரின் பணி சிறக்க மனதார வாழ்த்துகிறோம் இறைவனை வேண்டுகிறோம்”

Also Read: வெளிநாடு வாழ் இந்தியர்களின் தகவல்களை சேகரிக்க வேண்டும்! : மாநில அரசுகளுக்கு, ஒன்றிய அரசு உத்தரவு!