Tamilnadu

மற்றொரு பெண்ணோடு தொடர்பு ? மனைவியை கடத்திய பாஜக பிரமுகர்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி !

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம், ஜெயா நகரை சேர்ந்த லட்சுமிபிரியா என்பவர் கணவரை இழந்து தனியே வசித்து வந்துள்ளார். கடந்த 2009 ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் இடம் பார்க்க வந்த சிவகுமார் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

லட்சுமிபிரியாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சிவகுமார் பாஜக சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணியில் மாவட்ட தலைவராக உள்ளார். இதனிடையே சிவகுமார் பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பது சமீபத்தில் தெரிந்து, அதை பற்றி கேட்டபோது இருவருக்கிடையே வீட்டில் அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.

இந்த பிரச்சனை முடிக்க பாஜக பிரமுகர் சிவக்குமார் அவரது மனைவியை கடத்த திட்டம் தீட்டி அதற்கு அவரது நண்பர்களை அழைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் (28.09.2024) மாலை லட்சுமிபிரியா திருநீர்மலை கோயிலுக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். லட்சுமி பிரியா வீட்டின் வெளியே கார் வந்து நின்றதும் காரை விட்டு கிழே இறங்குவதற்குள் ஒரு காரில் வந்த லட்சுமிபிரியாவின் கணவர் பாஜக பிரமுகர் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் லட்சுமி பிரியாவை மிரட்டியுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மற்றொரு வாடகை காரில் மூன்று பேர், ஒரு ஆட்டோவில் நான்கு பேர், ஒரு பைக்கில் ஒருவர் என 13 ஆண்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துள்ளனர். அவர்கள் அடையாளம் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்தவாறு லட்சுமிபிரியாவின் கையை பிடித்து இழுத்து, பெண் என்றும் பாராமல் சகதியில் கிழே தள்ளி அவரை கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் பெரும்பாக்கம் போலீசார் பெண்ணை கடத்திய கும்பலை சென்னை பள்ளிக்காரணை அருகே மடக்கி பிடித்து கடத்தப்பட்ட லட்சுமிபிரியாவை மீட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சிவக்குமாருக்கும் அவரது மனைவி லட்சுமி பிரியாவிற்கும் ஏற்பட்ட தகராறில் மனைவியை கடத்தி கத்தி முனையில் மிரட்டி சில ஆவணங்களில் கையெழுத்து வாங்க முயற்சித்தது தெரியவந்தது.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி பிரியா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருப்பதி லட்டில் கலப்படம் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆந்திர முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !