Tamilnadu

”மகளிர் முன்னேற்றம்தான் திராவிட மாடல்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அசத்தலான முதல் பேச்சு!

சென்னை கலைவாணர் அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளர் விருதுகள், நகர்ப்புர சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் 2022-23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளுக்கான மணிமேகலை விருதுகளையும், ஊரகப் பகுதியில் செயல்படும் 20 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், 10 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய், 10 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், மற்றும் 2 வட்டார அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதமும், நகர்ப்புரங்களில் செயல்படும் 20 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், 6 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய், இரண்டு நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ஐந்து லட்சம் வீதமும் விருதுத் தொகைகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 516 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 6,135 மகளிருக்கு ரூ.30.20 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டது.

இதற்கு முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியே நம்முடைய மகளிர் குழக்களையும், உங்களையும் கவுரவிக்கும் நிகழ்ச்சியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

பட்டமோ, பரிசோ கிடைத்தால் தாயிடம் சென்றுதான் குழந்தை முதலில் காட்ட வேண்டும் என ஆசைப்படும். அப்படி தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் என்ற மாபெரும் பொறுப்பை ஏற்ற பிறகு என்னுடைய தாய்கள் மற்றும் சகோதரிகளான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.84,815 கோடி வங்கிக்கடன் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் திராவிட மாடல் ஆட்சி அமைந்த 3 ஆண்டுகளில் ரூ.92 ஆயிரம் கோடிக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நிறுத்தப்பட்ட மணிமேகலை விருது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் மகளிர் முன்னேற்றத்தில் நமது அரசு காட்டும் அக்கறையின் எடுத்துக்காட்டாகும்.

எல்லா துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் அடிப்படை கொள்கை. அதன்படி பெண்கள் அனைவரும் மேலே வரவேண்டும் என்ற நோக்கத்தில் ’விடியல் பயணம்’,’புதுமைப் பெண்’, ’கலைஞர் மகளிர் உரிமை தொகை' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் மேம்பாட்டிற்கு எடுத்துக்காட்டு மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது என தெரிவித்துள்ளார்.

Also Read: நானே உங்களை நேரில் சந்திக்க வருகிறேன் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!