Tamilnadu

பாஜக கொடியுடன் காரில் ஆடு திருடிய கும்பல்... பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் அதிரடி கைது... - கரூரில் ஷாக்!

கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டி ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக ஆடுகள் தொடர்ந்து திருடு போயுள்ளது. இதையடுத்து அந்த பண்ணை உரிமையாளர் சின்னசாமி என்பவர், ஆட்டுப்பட்டியை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கடந்த 27-ம் தேதி அதிகாலை நேரத்தில், அந்தப் பகுதியில் இன்னோவா கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரில் பாஜக கொடியும், பிரதமர் மோடி புகைப்படமும், தாமரை சின்னமும் இருந்துள்ளது. மேலும், காரில் வந்த 4 பேர் அங்கிருந்த 4 ஆடுகள், 2 செம்மறி கடா, 10 ஆட்டுக்குட்டிகளை தங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டுப்பட்டி உரிமையாளர், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணையை தொடங்கினர். அதன்படி, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அந்த கும்பல் பாஜக கொடியுடன் வந்த காரில் ஆடு திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததை கண்டனர்.

இதைத்தொடர்ந்து அதனடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், இன்னோவா காரையும், காரில் வந்த 3 பேரையும் அடையாளம் கண்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். போலீசார் விசாரணையில் காரில் வந்தவர்கள் திண்டுக்கலைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி ரஞ்சித்குமார், சதீஷ்குமார், சிவக்குமார் ஆகிய 3 பேரும் ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது.

மேலும், ரஞ்சித் குமாரின் இன்னோவா காரில் வந்து ஆண்டிப்பட்டிக் கோட்டையில், 16 ஆடுகளை திருடியதையும் ஒப்புக் கொண்டனர். அதோடு கடந்த மூன்று மாதங்களாக அரவக்குறிச்சி தென்னிலை சின்ன தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததோடு, ஆடுகளை திருட பயன்படுத்திய இன்னோவா காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

‘ஆடுதான் என்னுடைய அடையாளம்’ என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து பதிவிட்டிருந்த நிலையில், அவருடைய சொந்தத் தொகுதியான அரவக்குறிச்சியில், அவருடைய கட்சி நிர்வாகிகளே விவசாயிகளின் வாழ்வதாரமான ஆடுகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வீழ்ச்சியை நோக்கி பாஜக! : பெரும்பான்மை ஆதரவு பெறும் முனைப்பில் காங்கிரஸ்!