Tamilnadu

“என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்த முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றி” - செந்தில் பாலாஜி பேட்டி !

பா.ஜ.க முன்னெடுத்த குறுக்கு வழியில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 25 லட்சம் ரூபாய் இரு நபர் பிணை உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலையாக உத்தரவு பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாலை அணிவித்து வரவேற்றார்.

மேலும் சிறைக்கு வெளியே திரண்டிருந்த திமுக தொண்டர்களும் செந்தில் பாலாஜிக்கு ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “ என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்த முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்நாள் நன்றி. கழக இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி.

என் மீது தொட்ரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட பொய் வழக்கு. இந்த வழக்கை நீதிமன்றத்தில் சட்டரீதியாக சந்தித்து நிரபராதி என்று நிரூபிப்பேன்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா ஆகியோர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரின் விடுதலையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read: "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு இசைஞானி இளையராஜா நன்றி !