Tamilnadu

செந்தில் பாலாஜி ஜாமின் : “அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டியடி...” - கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் என்ற வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. பல்வேறு இன்னல்கள், சிக்கல்கள், இடையூறுகள் வந்த போதும் சட்டரீதியாக இந்த பிரச்னையை எதிர்கொண்டார் செந்தில் பாலாஜி.

தொடர் போராட்டங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி இன்று (செப்.26) தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு அளித்து வரும் நிலையில், இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாடு மக்களுக்காக பல கோரிக்கைகளுடன் முதலமைச்சர் டெல்லி செல்ல உள்ள நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைத்துள்ளது. சென்டிமென்ட் ஆக டெல்லி பயணமும் மிகப் பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் வருகின்றது.

செந்தில் பாலாஜி 15 மாதம் சிறையில் இருந்துள்ளார். இது தேவை இல்லாத ஒன்று என்பதை நீதிமன்றம் சொல்லியுள்ளது. திமுக-விற்காக செந்தில் பாலாஜி கடுமையாக உழைத்தார். கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக அவரை கைது செய்து உள்ளே வைத்திருந்தனர்.

திமுக செல்வாக்கை யாரும் குறைக்க முடியாது என்பதற்கு சான்றாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40/40 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்த விதமான தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. அமலாக்கத்துறை வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த வழக்கை இழுக்கடித்து தாமதமாக்கினர். அதற்கு நீதிமன்றம் சரியான பதில் கொடுத்துள்ளது.

பாஜக இனியாவது திருந்த வேண்டும். அரசியல்வாதிகள் மீது போடப்படும் அனைத்து வழக்குகளில் உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்து ஜாமீன் கொடுத்துவிட்டது. இனியும் திருந்தவில்லை என்றால், பாஜகவுக்கு கேடு காலம்தான். செந்தில்பாலாஜி அமைச்சராவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார்.” என்றார்.

Also Read: “உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” - செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு முதலமைச்சர் வரவேற்பு !