Tamilnadu

தீவிரமடையும் குட்கா வழக்கு : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருள்கள் விற்றதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட குட்கா முறைகேடு வழக்கில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன்உள்பட 21 பேர் மீது கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா முன் கடந்த 9 தேதி விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, ஓய்வு பெற டி.ஜி.பிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, சுமார் 250 பக்க கூடுதல் குற்றபத்திரிகை, ஆவணங்கள் என சுமார் 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட நகல்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, கூடுதல் குற்றபத்திரிகை பெற்றுக் கொள்வதற்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அன்றைய தினம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Also Read: குழந்தைகளின் ஆபாசப் படம் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!