Tamilnadu

போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி முழங்காலுக்கு கீழ் சுடப்பட்டு கைது : கோவையில் போலீசார் அதிரடி !

மதுரை, ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி (31) என்பவரை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஆல்வின் (39), என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்த நாகர்கோவிலை சேர்ந்த ஆல்வின் வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு ஆல்வின் பீளமேடு கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பீளமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தலைமை காவலர் சந்திரசேகர் மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர் அங்கு சென்று தேடினர்.

அங்கு உள்ள ஒரு புதரில் மறைந்து இருந்த ஆல்வின் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் உடனே சுற்றி வளைத்தனர். அப்போது ஆல்வின் மறைத்து வைத்து இருந்த கத்தியால் காவலர் ராஜ்குமாரை குத்தி விட்டு தப்ப முயன்றார். அப்போது காவலர் ராஜ்குமார் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் அவருடன் சென்று இருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மீண்டும் மற்ற இருவரையும் தாக்க ஆல்வின் முயற்சி செய்ததைப் பார்த்த உடனே உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் வைத்து இருந்த துப்பாக்கியால் 3 முறை சுட்டதில் இரண்டு முழங்கால்களில் குண்டு பாய்ந்தது. இதில் ஆல்வின் அந்த இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார்.

உடனே போலீசார் அவரை பிடித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் ஆல்வின் தாக்கியதால் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட காவலர் ராஜ்குமாரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read: தி.மு.க தொடங்கிய மாநில சுயாட்சிக் குரல் இன்று பல்வேறு மாநிலங்களிலும் ஒலிக்கிறது - முரசொலி !