Tamilnadu

”ஒரே நாடு ஒரே தேர்தலை இந்திய நாடு ஏற்றுக்கொள்ளாது" : கனிமொழி எம்.பி பேட்டி!

தி.மு.க மகளிர் அணி மற்றும் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில்‌, திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும்‌ வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி முன்னெடுப்பில் நடைபெறும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி இன்று தஞ்சாவூர் குருதயாள் சர்மா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கனிமொழி எம்.பி கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி," ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு அமைச்சரவைதான் ஒப்புதல் அளித்துள்ளது, நாடு ஒப்புதல் அளிக்கவில்லை. இதில் முதல்வரின் நிலைப்பாடு என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.அனைத்தையும் ஒரே நாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என நினைத்தால் மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.கவினர்.

ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வருடம் முடியாத அரசின் நிலை என்ன? ஒரே தேர்தலால் மக்களுக்கு வரும் பயன் என்ன? என எதுவுமே இல்லாமல் அவர்களுக்கு லாபம் தரக்கூடிய ஒன்று என எதை நினைக்கின்றனரோ, அதனைச் செய்து விட நினைக்கின்றனர். அவர்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து மக்கள் மீது திணிக்க வேண்டும் என்று தான் என்னுகிறார்கள். ஜனநாயகத்திற்கும், மாநிலங்களுடைய உரிமைகளுக்கும் எதிராக இருக்கக்கூடிய எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது." என தெரிவித்துள்ளார்.

Also Read: “நீட் விலக்கு : ஒன்றிய அரசின் கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்துவிட்டோம்” - அமைச்சர் ரகுபதி !