Tamilnadu

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 25 குற்றவாளிகளுக்கு குண்டாஸ் - காவல் ஆணையர் அதிரடி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கடந்த 05.07.2024 அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கு.ஹரிகரன்,மலர்கொடி, சதீஷ்குமார்,கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா,பிரதீப், முகிலன், விஜயகுமார் (எ) விஜய், விக்னேஷ் (எ) அப்பு, அஸ்வத்தாமன், பொற்கொடி,ராஜேஷ், செந்தில்குமார் (எ) குமரா, கோபி ஆகிய 15 பேரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் நேற்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 15 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏற்கனவே மேற்கண்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 எதிரிகள் கடந்த 07.09.2024 அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி. திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் 61601 சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

Also Read: லப்பர் பந்து முதல் கடைசி உலகப் போர் வரை... நாளை திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய தமிழ் படங்கள் என்ன?