Tamilnadu

”ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் திட்டம் நிறைவேறாது” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!

ஆசிரியர் அருண் பிரசாத்தின் தொகுப்பு நூலான ‘தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (செப்.20) சென்னை தியாகராய நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நூலின் முதல் பிரதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, அரசியல் செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”இந்த புத்தகத்தை வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் பதிப்பாளர்தான். நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி என 22 நாட்கள் 9000 கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டுள்ளேன்.

அப்போது, மதவாதம் மீது மக்களுக்கு இருந்த கோபத்தை பார்த்தேன், பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம் மாபெரும் மக்களின் கோபத்தை பிரச்சார களத்தில் நான் உணர்ந்தேன். அதன் வெளிப்பாடாகத்தான் 2024 தேர்தல் முடிவுகள் இருந்தது. இது எல்லாம்தான் இந்த புத்தகத்தில் கட்டுரைகளாக உள்ளது.

நமது முதலமைச்சரின் கட்டுரை புத்தகத்தின் முதல் கட்டுரையாக முத்தாய்ப்பாக உள்ளது .பாஜக 10 வருடம் பாசிச போக்கை எடுத்துரைத்துள்ளார். இந்தியா கூட்டணியும் மக்களும் கடிவாளம் போட்டு உள்ளார் என்பதை முதலமைச்சர் 360 டிகிரி அலசி இருக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர ஒன்றிய பாசிச அரசு முனைப்பு காட்டுகிறது. இவர்களது திட்டம் எந்த காலத்திலும் வெற்றிப் பெறப்போவதில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமே தெரிந்த என்னை இந்திய அளவில் கொண்டு சேர்த்த பெருமை மோடி அவர்களையே சாரும். பா.ஜ.க தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாது, அவர்களின் மக்கள் விரோத கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஒரே நாடு ஒரே தேர்தலை இந்திய நாடு ஏற்றுக்கொள்ளாது" : கனிமொழி எம்.பி பேட்டி!