Tamilnadu

போலி IAS அதிகாரியாக புகார் கொடுக்க வந்த பெண்... உடந்தையாக இருந்த தூத்துக்குடி பாஜக நிர்வாகியும் கைது!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்களின் புகார்கள் குறித்த குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (செப்.18, புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்திற்கு டிப் டாப்பாக வந்த பெண் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி எனவும், உத்தர பிரதேச மாநிலத்தில் கல்வித்துறையின் செயலாளராக பணிபுரிவதாகவும் கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து தன்னிடம் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு நபர் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் புகார் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், அந்த பெண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியா என்பது குறித்து விசாரணை செய்ய மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் போலி ஐஏஎஸ் என தெரிய வந்தது. மேலும் அவர் நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த மங்கையர்க்கரசி என்பதும், அவருடன் வந்த மற்றொரு நபர் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ரூபிநாத் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலியாக ஐஏஎஸ் என ஏமாற்றிய மங்கையர்கரசி மற்றும் அவருக்கு உதவியாக வந்த ரூபிநாத் ஆகியோரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து மங்கையர்க்கரசி மற்றும் ரூபிநாத் ஆகியோரை சிப்காட் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் போலி ஐஏஎஸ் என கைது செய்யப்பட்டுள்ள மங்கையர்க்கரசிக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள, ரூபிநாத் திருநெல்வேலி மாவட்ட பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமே போலியாக ஐஏஎஸ் எனக்கூறிய பெண் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தேவதானம் திருக்கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு... - அறநிலையத்துறை அதிரடி!